செய்திகள்

மகாராஷ்டிரா: ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிரட்டி பணம் பறித்த தம்பதி கைது

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

மும்பை:

மராட்டிய மாநிலத்தின் மாநில போக்குவரத்து துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் ராதேஷ்யாம் மோபல்வார். இவர் மீது எழுந்த ஊழல் புகாரை தொடர்ந்து முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை நீக்கி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ராதேஷ்யாம் மோபல்வாரை டோம்பிவிலியை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஆகியோர் தொடர்பு கொண்டனர். சதீஷ் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த தம்பதியினர் ஊழல் தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவற்றை வெளியிடாமல் இருக்க 7 கோடி ரூபாய் தரவேண்டும் என பேரம் பேசினர்.  தரவில்லையென்றால் அவரது மகளை கடத்துவோம் என மிரட்டினர்.

இதையடுத்து, ராதேஷ்யாம் தானே மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்களது அறிவுரையின் பேரில் தனது நண்பரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து அனுப்புவதாக சதீஷ் வீட்டுக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து, அங்கு சென்ற நண்பரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பெற்ற சதீஷ் மங்லே தம்பதியை மறைந்திருந்த போலீசார் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், லேப்டாப், சிடிக்கள் மற்றும் பென் டிரைவ்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிரட்டி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.