செய்திகள்

வேலையை விட தேசம் தான் முக்கியம்: ராஜினாமா செய்த ஆசிரியை பரபரப்பு கடிதம்

என் வேலையை விட எனக்கு தேசம் தான் முக்கியம். என் ஆசிரியர் பணியினை இன்று வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன் என்று அந்த கடித்தத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாலை மலர்

விழுப்புரம்:

நீட் தேர்வை எதிர்த்து ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது பணியை ராஜினாமா செய்தார்.

கல்வி அதிகாரியிடம் அவர் கொடுத்த ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 2002 முதல் ஆசிரியராகத் தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன்.

இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஒரு ஆசிரியராக கல்வி எழுச்சி கொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது தன்னெழுச்சியை வெளிப்படுத்த நேற்று எனது பள்ளி வெளியே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன்.

அனுமதி இல்லாமல் போராட்டத்தை தொடரக் கூடாது என்றதும் 1.30 மணியளவில் அங்கிருந்து கிளம்பி போலீசாரிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி வழங்கவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்விப்பிரச்சினைக்கு குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம்.

சம்பளத்திற்காக ஆசிரியர்கள் போராடும் போது சமத்துவ கல்விக்காக ஒரு ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையை விட எனக்கு தேசம் தான் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியினை இன்று வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு அந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.