ராஞ்சி:
81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிய வந்து விடும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.