தொழிலாளி பிணம் 
செய்திகள்

திருப்பத்தூர் அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு

கந்திலி அருகே 15 நாட்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கிணற்றில் கல்லில் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள ஆதியூர் பென்னாச்சி அம்மன் கோவில் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 50), ஆடு மேய்க்கும் தொழிலாளி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வயிற்றில் கல்லை கட்டிய நிலையில் ஜெய்சங்கர் பிணமாக மிதந்தார்.

இதைக் கண்ட பொதுமக்கள் கந்திலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இறந்து சில நாட்கள் ஆகி இருப்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்சங்கர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

அவரது உடலில் கல்லை கட்டி இருந்ததால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.