கொரோனா வார்டு 
செய்திகள்

திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம்- அதிகாரிகள் விசாரணை

திருப்பூர் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூரில் கொரோனா பாதிப்புகள் நேற்று 161 ஆக இருந்தது.  இதனால், திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,590 ஆக உயர்ந்தது.  நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை.

இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் அடுத்தடுத்து இன்று மரணம் அடைந்தனர்.

இந்த மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளது.  மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.  இதேபோன்று திருப்பூரில் கொரோனா வார்டில் அடுத்தடுத்து 3 பேர் மரணம் அடைந்தது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.