ஆரஞ்சு மண்டலம் 
செய்திகள்

ஆரஞ்சு மண்டலமானது விழுப்புரம்-கடலூர் மாவட்டம்

கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாலை மலர்

விழுப்புரம்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழக மக்களையும் உலுக்கி வருகிறது.

எனவேதான் ஊரடங்கு உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. ஆரம்ப கட்டத்தில் விழுப்புரம் மாவட்ட பகுதியில் கொரோனா தாக்கம் குறைவாக இருந்தது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்களை பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 22 பேர் மட்டும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தை சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 26 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். எனவே கடலூர் மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.