குளித்தலை:
குளித்தலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து குளித்தலை மற்றும் கிராமப்பகுதிகளுக்கு வருபவர்களை குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் தனிமைப்படுத்தப்பட்டும், பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டும் உள்ளனர்.
இந்தநிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி நேற்று குளித்தலை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிவார்டு பகுதி, படுக்கை வசதிகளை பார்வையிட்டார். அங்கு அனுமதிக்கபட்டுள்ளவர்களின் விவரம், வசதிகள் மற்றும் கொரோனா நோய்தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். அப்போது, குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.