கர்ப்பிணி 
செய்திகள்

பேராவூரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சளிப் பரிசோதனை

பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 கர்ப்பிணி தாய்மார்களுக்கு, சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டது.

பேராவூரணி:

கொரோனா தடுப்பு மண்டல அலுவலர், சண்முகம், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடத்தி கொரோனா உள்ளதா எனக் கண்டறிய உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல், அழகியநாயகிபுரம், பெருமகளூர், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு வார காலத்திற்குள் பிரசவிக்க உள்ள 24 தாய்மார்களுக்கு, முதல்கட்டமாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், நேரில் ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவமனை டாக்டர் ஹம்சவாணி தலைமையில், ஆய்வக நுட்பநர்கள் கார்த்திகா, குமரேசன், பாண்டியன் ஆகியோர் சளி மாதிரியை ஆய்வுக்காக எடுத்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.