சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் 
செய்திகள்

சேலத்தில் பரவி வரும் கொரோனா- விதிகளை கடுமையாக்கிய மாவட்ட நிர்வாகம்

சேலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மாலை மலர்

சேலம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் மிகவும் அதிகமானதால் வரும் 30-ந் தேதி வரை இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனையடுத்து மதுரையிலும் கொரோனா அதிகரித்ததை தொடர்ந்து அங்கும் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அளவிற்கு ஏற்றவாறு மாவட்ட நிர்வாகம் பாதுபாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இன்று சேலத்தில் உள்ள அனைத்து தேநீர் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. உணவுகள் மற்றும் பேக்கரிகளில் அமர்ந்து உணவு உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் முன்பு கயிறுகள் கட்டப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றும் விதமாக உணவு பொருட்கள் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகள்,  மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் கொடுக்ககூடாது அவ்வாறு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து மாத்திரைகள் வழங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.