முகக்கவசத்துடன் காசி விசுவநாதர் 
செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி - வாரணாசி காசி விசுவநாதருக்கு முகக்கவசம்

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதருக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

வாரணாசி:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், உ.பி.யின் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக, அந்த கோவிலின் பூசாரி கிருஷ்ண அனந்த பாண்டே கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காசி விசுவநாதருக்கு நாங்கள் முகக்கவசம் அணிவித்து உள்ளோம்.

கடவுள் சிலைகளுக்கு குளிராக இருக்கும்பொழுது ஆடைகள் அணிவிப்பது போன்றும், அதிக வெப்பம் நிறைந்திருக்கும் பொழுது ஏ.சி.யோ அல்லது மின் விசிறியோ உபயோகிப்பது போன்றும் முகக்கவசங்களை அணிவித்து உள்ளோம்..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடவுள் சிலைகளை யாரும் தொடவேண்டாம் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தி கூறுகிறோம். யாரேனும் சிலையை தொட்டால் அதனால் வைரஸ் பரவி, மக்கள் அதிகளவில் பாதிப்படைய கூடும் என தெரிவித்தார்.

இந்த கோவிலில் பூசாரி மற்றும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி இறைவனை வழிபட்டு வருகின்றனர்.