டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினார்கள். இது குறித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 17 வயது மற்றும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
கைதான 17 வயது மாணவர் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கூடத்திலும், 19 வயது மாணவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 19 வயது மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.