சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பரிசோதனைகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து உள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழக அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 7 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்பு 150க்கும் அதிகமாக உள்ளது.
இதனால் இந்த மாவட் டங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கிராமங்கள் மற்றும் ஒன்றியங்களை பொறுத்தவரை குடியிருப்புகளை கணக்கீடு செய்து கண்காணிக்கிறோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மற்றும் கூடுதலாக மாதிரி பரிசோதனை நடத்தப்படுகிறது. தினமும் 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட வந்த நிலையில் இப்போது 90 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உயிரிழப்புகளை குறைக்கவும் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அப்போதுதான் நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.