பள்ளி கல்வித்துறை 
செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலால் விடுமுறை: 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளி தேர்வு ரத்தாகுமா?

கொரோனா அச்சுறுத்தலால் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வை ரத்து செய்தால் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 16-ந்தேதி முதல் 31-ந்தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும், வெளியில் செல்ல வேண்டாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் தேர்வு நடத்தப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வு எழுத வேண்டுமா? ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் முறையாக வகுப்புக்கு வந்தாலே போதுமானது. அவர்களை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.

இந்த நிலையில் விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கி தேர்வு நடத்துவது என்பது சிரமமான வி‌ஷயம். மேலும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதால் ஏப்ரல் 1-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. வழக்கமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் தேர்வு தொடங்கி இறுதியில் முடியும். மே மாதத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்படும்.

தற்போது கொரோனா, தொற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. என்றாலும் ஆண்டு இறுதி தேர்வையும் ரத்து செய்தால் தான் மாணவர்கள் பதட்டம் இல்லாமல் வகுப்பிற்கும் வர முடியும் என்று பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்புவரை படித்து வருகின்றனர். அவர்களுக்கு தேர்வு வைக்காமல் ரத்து செய்து அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சியை வழங்க வேண்டும்.

தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 26-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 27-ந்தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. ஒரு விதமான பதட்டத்தில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வரும் நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வை ரத்து செய்தால் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு சில நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.