வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை படத்தில் காணலாம். 
செய்திகள்

வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தனியார் பஸ், லாரி உரிமையாளர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், லோடு ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது:-

45 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகரில் முதல்கட்டமாக சத்துவாச்சாரியில் உள்ள தஞ்சம்மாள் திருமண மண்டபம், காட்பாடி ஓடை பிள்ளையார்கோவில் பகுதியில் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், வேலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் அருகே மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை அருகே உள்ள பெட்ரோல் பங்க்குகள், ஓட்டேரியில் உள்ள பிரியா மஹால் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

இந்த முகாம் நடைபெறுவது குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த முகாம் நாளை முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.