சென்னை:
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஒரு நோயாளி, ஒரு செவிலியர், 4 பணியாளர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரவல் அறியப்பட்ட பின்னணியில் அங்கே அமைந்திருக்கும் 2 ஆண்களுக்கான சிகிச்சை பகுதியில் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதென அரசு முடிவு செய்தது.
மருத்துவமனை இயக்குனர் மற்றும் 26 உள் நோயாளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு நோயாளிகள் தவிர மற்ற 24 நோயாளிகளுக்க மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
தங்களுக்கு அறிகுறிகள் வந்தால் அதை தெளிவாக மற்றவர்களிடம் கூற முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை பொருத்தக் கூடாது மற்றும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
தமிழக அரசின் தரப்பில் ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகள் காரணமாக சொல்லி இந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கள் உடலில் என்ன மாற்றம் நடக்கிறது என்பதை சொல்ல முடியாத நிலையில் உள்ள நோயாளர்களுக்கு ஒரு வாரத்தில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்ள அனைத்து நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதில் ஒரு பகுதி முடிவுகள் மட்டுமே வந்திருக்கின்றன. இன்னும் சில நாட்களின் அனைத்து பரிசோதனை முடிவுகளும் தெரியவரும்.