உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நடப்பாண்டுக்கு கடந்த மாதம் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கி இதுவரை 16 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ளபோதும் அத்தியாவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்ற அடிப்படையில் இந்த ஆலை இயங்கி வருகிறது. 3 ஷிப்ட் முறையில் தொழிலாளர்கள் கரும்பு அரவையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அமராவதி ஆலைப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் நடத்தினர். முகாமில் தொழிலாளர்கள் 300 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் தொழிலாளர்கள் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சக ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் கரும்பு அரவைக்கு வந்தவர்களும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
உடுமலை அருகே உள்ள சித்தக்குட்டை பகுதியில் தனியார் நூல் மில்லில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வட்டார சுகாதாரத்துறை சார்பில் அங்கு தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப் பட்டது.
இதில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 126 பேருக்கு சளி மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொற்று பாதித்த வட மாநில தொழிலாளர்கள் 160 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.