இளம்பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை மந்திரி சுரேஷ்குமார் வழங்கிய போது எடுத்த படம். 
செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 130 ஆசிரியர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை மந்திரி சுரேஷ்குமார் வழங்கினார்.

மாலை மலர்

பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா அலையில் சிக்கி தினமும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

அதுபோல கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 130 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர். இதனால் கொரோனா தாக்கி உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இறந்த 130 ஆசிரியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை சுரேஷ்குமார், கலந்து கொண்டு, கொரோனாவால் இறந்த 130 ஆசிரியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுரேஷ்குமார் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆசிரியர்கள் பலர் உயிரிழந்தனர். இது கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு ஆகும். இத்தகைய நெருக்கடியான நேரத்தில் இறந்த ஆசிரியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. குடும்பங்களுக்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்கள் மரணம் அடைந்ததால் திக்கு தெரியாமல் இருந்த அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அரசு வேலை மன திருப்தியை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.