பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோவுக்கு கடந்த மாதம் (மே) 5-ந்தேதி மிரட்டல் வந்தது. மர்ம நபர் ஒருவர் இந்த நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்தார்.
எனக்கு ரூ.500 கோடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் பயங்கர பின்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக பெல்லந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த நிறுவனத்திற்கு இ-மெயிலில் மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் மர்ம நபர் எழுதி இருப்பதாவது:-
72 மணி நேரத்தில் 500 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்கள் அலுவலகத்தில் பயங்கரவாத சம்பவம் அரங்கேறும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து நிறுவனம் சார்பில் பெங்களூருவில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில் 2 மிரட்டல் கடிதங்களும், ஒரே இ-மெயில் ஐ.டி.யில் இருந்து வந்திருப்பதையும், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.பி.முகவரி என்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிரட்டல் கடிதம் விடுத்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.