செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடக்கோரி விவசாயி தீக்குளிக்க முயற்சி

பொம்மிடி அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

பொம்மிடி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த திப்பிரெட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தலைவர், நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தது. கடந்த 23-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கோரி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாலை 6.30 மணிக்கு, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (வயது 40) என்பவர் திடீரென தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பொம்மிடி போலீசார் வந்தனர். அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.