திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சியில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிப்பாளையம் அருகே உள்ள வையப்ப மலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் பெரியசாமி. நேற்று இரவு இவர் பணியில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ஒரு கும்பல் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. இதை பெரியசாமி தடுக்க முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தாக்கியது. மேலும் ஆயுதங்களாலும் அவரை கண்மண் தெரியாமல் அடித்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை பெரியசாமி பிணமாக கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பெரியசாமி பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.