செய்திகள்

ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருநின்றவூர்:

ஆவடி நகராட்சியில் துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 425 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதுபற்றி நகராட்சி கமி‌ஷனர், சுகாதார அலுவலரிடம் ஒப்பந்த் தொழிலாளர்கள் முறையிட்டனர். எனினும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதார அலுவலர் மொய்தீன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.