கனமழை 
செய்திகள்

பாபநாசம் பகுதியில் தொடர் கனமழை- 37 வீடுகள் இடிந்து சேதம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் 37 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. 2 பசு மாடுகள் இறந்துள்ளன.

மாலை மலர்

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் மழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. மழை விடாமல் கனமழையாக பெய்து வருகிறது. பாபநாசம், ராஜகிரி, பண்டாராவடை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். 

இதனால் குடிசை பகுதி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் பேரூராட்சி காப்பன் தெருவில் செல்வகுமார் என்பவர் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அரையபுரம் 108 சிவாலயம் முல்லை நகரில் வசித்து வரும் லதா என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. 

கோபுராஜபுரம் பெருமாங்குடி கிராமத்தில் குடியான தெருவில் வசித்து வரும் சரோஜா என்பவரது ஓட்டு வீடு தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளது. மழையினால் பாதிக்கப்பட்டு குடிசை வீடு இடிந்த இடங்களை கும்பகோணம் சப்-கலெக்டர் வீராசாமி நேரில் சென்று பார்வையிட்டார். உடன் பாபநாசம் தாசில்தார் கண்ணன் , மண்டல துணை தாசில்தார் விநாயகம், ஹெலன்சாய்ஸ், வருவாய் ஆய்வாளர்கள் ராஜ்குமார், மஞ்சுளா, கலையரசி, வினோதினி, சபினாபேகம், கோபால்தாஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சென்றிருந்தனர். பாபநாசம் தாலுகாவில் தொடர் கன மழை காரணமாக இதுவரை 37 குடிசை வீடுகளும், 9 ஓட்டு வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாகவும், 2 பசு மாடு இறந்துள்ளதாகவும் தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.