செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் தனபால் இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #Yuvaraj

மாலை மலர்

நாமக்கல்:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால் வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.