செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் அமிர்தாபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 38). கூலி தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களான மற்றொரு கணேசன் (35), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி (35) ஆகிய 3 பேரும் நேற்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் காந்திநகரில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கணேசன் (38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவரது நண்பர்களான மற்றொரு கணேசன், பழனி இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனடியாக போலீசார் 2 பேரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனியும் உயிரிழந்தார். மற்றொரு கணேசன் (35) தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.