புதுடெல்லி:
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை குவித்து வைத்துள்ளவர்கள் தொடர்பாக ‘ஆப்பிள்பை’ என்ற சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 714 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தகவல்களை கொண்டு விசாரணை நடத்த இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது.
கருப்பு பணம் பதுக்கியவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த பட்டியலில் இந்தியா 19-வது இடத்தில் உள்ளது. தற்போது கசிந்துள்ள ‘‘பாரடைஸ் பேப்பர்ஸ்’’ ஆவணங்களில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா, பாரதிய ஜனதா எம்.பி. ரவிந்திர கிஷோர் சின்கா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர தொழில் அதிபர் விஜய்மல்லையாவுடன் தொடர்புடைய சிலர் உள்ளிட்ட தனி நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் கருப்பு பணம் குவித்து வைத்திருப்போரின் பட்டியலில் இடம் பெற்ற மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா, பா.ஜனதா எம்.பி. ரவிந்திரகிஷோர் சின்கா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்துக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் பிரதமர் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.
ஏற்கனவே வெளியான பனாமா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவண விவகாரம் குறித்து மோடி அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த ஆவணங்களில் வெளி வந்துள்ள மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா மீதும் மற்றவர்கள் மீதும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா?
இந்த விவகாரத்தில் சிக்கிய ஜெயந்த் சின்கா மத்திய மந்திரி பதவியையும், பாரதிய ஜனதாவை சேர்ந்த ரவிந்திர கிஷோர் சின்கா எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.