புதுடெல்லி:
வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சாமூவேல் கூஸ் முன்னிலையில் நடைபெறுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிரவ் மோடி சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இந்தியா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்து வாதிட்டனர்.
இந்நிலையில், நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வர விடாமல் காங்கிரஸ் கட்சி தடுப்பதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
‘முன்னாள் நீதிபதியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அபய் திப்சே, நிரவ் மோடிக்கு ஆதரவாக லண்டன் கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார். நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இந்திய சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் நிரவ் மோடியை காப்பாற்ற முயற்சிப்பது தெளிவாகிறது’ என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.