செய்திகள்

கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - கவர்னரை சந்தித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். #ManoharParrikar #Congressstakesclaim #Goagovernment

மாலை மலர்

கோவா சட்டசபையில் உள்ள 40 இடங்களில் முன்னர் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக 13 சொந்தக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

முன்னாள் ராணுவ மந்திரியான மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதல் மந்திரி மனோகர் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்ததையடுத்து ஆளும்கட்சியின் பலம் மேலும் குறைந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகல் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்தனர். சட்டசபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற வகையில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்ற கடிதத்தை அவர்கள் கவர்னரிடம் அளித்தனர்.