ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்மேகுமால் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரை அரசு அதிகாரி போன்று நடத்தாமல் தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் தன்மேகுமார் ஒரு முதல்- மந்திரி போன்று செயல்படுகிறார். அரசின் அனைத்து முடிவுகளும் அவரது உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகளை மிரட்ட அவரை வசுந்தரா பயன்படுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் பணத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி அல்லது விழா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகள் குறிவைத்து பழிவாங்கப்படுகின்றனர்.