செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவை சந்தித்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத் யாதவை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்தார். #RahulGandhi #LaluPrasadYadav #AIIMS #Delhi

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்ததில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்துகொண்டே வந்ததால் உயர் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #RahulGandhi #LaluPrasadYadav #AIIMS #Delhi