திருவள்ளூர்:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்திக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோரை நொய்டாவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்து செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்துவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ராகுல்காந்தி தடுமாறி கீழே விழுந்தார்.
பின்னர் உத்தரபிரதேச போலீசார் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை கைது செய்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருவள்ளூர் வடக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் சி.பி. மோகன்தாஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், வக்கீல் பிரிவு தலைவர் ஜான், சத்யா மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ராகுல் காந்தியையும், பிரியங்காவையும் கைது செய்த உத்தரபிரதேச போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.