ஷில்லாங்:
மேகாலயா மாநிலம் ரி போய் மாவட்டம் பகாம்சோத்ரி கிராமத்தில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் மீது நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். இதில் அலுவலகத்தின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்தது. மழை பெய்ததால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல் நாங்மின்சாங் மற்றும் உமையம் ஏரி பகுதிகளில் நேற்று இரவு நடந்த வன்முறைச் சம்பவங்களில் செய்தித்தாள் வாகனம், போலீஸ் வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
ரி போய் மாவட்டத்தில் நடைபெறும் ரெயில்வே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி மாணவர் சங்கத்தினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது கட்டுமானங்களுக்கு தீ வைத்தனர். பழங்குடியின மக்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்திற்குள் வெளிநபர்கள் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த ரெயில்வே திட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்.
தீ வைப்பு சம்பவம் தொடர்பாக காசி மாணவர் சங்க தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் தற்போது வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. எனவே, ரி போய் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.