வெளிநடப்பு செய்யும் காங்கிரஸ் எம்பிக்கள் 
செய்திகள்

மோடி பதில் அளிக்காததால் மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் பேசியது குறித்து பிரதமர் பதில் அளிக்காததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. 

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், மக்களவையில் இன்றும் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அப்போது பதிலளித்த வெளியுறவு துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஜி கூறியது போல், ஜனாதிபதி டிரம்ப் - பிரதமர் மோடி கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்து  விவாதிக்கப்படவில்லை. சிம்லா ஒப்பந்தத்திற்கு எதிரானதாக இருப்பதால் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது என்றார்.

ராஜ்நாத் சிங் பதிலால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.