கொலை 
செய்திகள்

தஞ்சை அருகே காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

தஞ்சை அருகே காங்கிரஸ் பிரமுகரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சையை அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திர போஸ் (வயது 64). இவர் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து வந்தார்.

இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் மருங்குளத்தில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் நாகப்ப உடையான்பட்டியில் இருக்கும் அவருடைய வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். இந்நிலையில் 12 மணி அளவில் வாழைத்தோட்டம் வழியாக மாடு மேய்க்க வந்தவர்கள் சுபாஷ்சந்திரபோஸ் பின் தலையில் வெட்டுப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேதுராமன், இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தடய அறிவியல் நிபுணர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. இதில் நாய் சிறிது தூரம் சாலையில் ஓடி அருகில் உள்ள மற்றொரு தோட்டத்திற்குள் புகுந்தது. இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வாழை தோட்டத்துக்கு வந்த சுபாஷ் சந்திரபோசை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து அவருடைய மூத்த மகள் இந்திரா (வயது 32) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.