தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில் விகாராபாத் மாவட்டம் கோடங்கல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே வேற்றுமையை உருவாக்கி உள்ளார். அதையே தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் செய்துள்ளார். மத்திய பாஜக அரசாங்கமும் சரி, தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி அரசாங்கமும் சரி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.
காங்கிரஸ் ஆட்சியின்போது தெலுங்கானா பகுதியில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த திட்டங்களை டிஆர்எஸ் அரசாங்கம் மறுவடிவமைத்து பெயர்களையும் மாற்றியது. அத்துடன் கமிஷன் பெறுவதற்காக செலவையும் அதிகரித்தது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கி, மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும். 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் பென்சன் 2000 ரூபாய் வழங்கப்படும்.