பெங்களூரு:
கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடி அமைப்பதற்கான சட்டவிதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மட்டும் மாநிலத்திற்கு என தனியாக கொடியை கொண்டிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் தனிக்கொடியை கொண்டுவர முனைப்பு காட்டி உள்ளது. சட்டப்பூர்வமாக தனிக்கொடியை கொண்டிருக்க சட்டவிதிகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தனிக்கொடியை கொண்டிருப்பது தொடர்பாக பரிந்துரையை முன்வைக்க அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்து உள்ளது.
தென் மாநிலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் சமீபத்தில் இந்தி திணிப்பு நகர்வு என போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடக ஆதரவு என கூறிக்கொள்ளும் அமைப்புகள் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக போராட்டம் நடத்துகிறது. கர்நாடக மாநிலம் தனிக்கொடி கொண்டுவர வேண்டும் என்ற நகர்வை அங்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜனதா விரும்பவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில் காங்கிரஸ் முதல்-மந்திரி சித்தராமையா, “மாநிலம் தனிக்கொடியை வைத்திருக்க தடைவிதிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு விதிகள் உள்ளது,” என பேசிஉள்ளார். மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனிக்கொடி என்ற கோஷமா? என்பதையும் சித்தராமையா மறுத்து உள்ளார். அவர் பேசுகையில், “இதில் தேர்தலுக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது. பாரதீய ஜனதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் வெளிப்படையாக சொல்லட்டும்,” என கூறிஉள்ளார்.