ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவி வகித்து வருகிறார். ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது.
அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை.
இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
கடந்த மாதம் 26-ந் தேதி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா, இந்த பூசலை வெளிப்படுத்தினார். “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மதிக்காத அரசு, கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வருகிற 19-ந் தேதி பதவி விலகக்கூடும் என்று ‘மணிலைப்’ என்ற ஆன்லைன் பொருளாதார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி, இந்த தகவலை தெரிவித்துள்ளது.