கைது 
செய்திகள்

இரணியலில் டிக்கெட்டுக்கு பணம் கேட்டதால் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

இரணியலில் டிக்கெட்டுக்கு பணம் கேட்டதால் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

இரணியல்:

ஈத்தாமொழி பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41).

இவர் ராணித்தோட்டம் அரசு பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காலையில் பணிமனையில் இருந்து நாகர்கோவில்- இணையம் செல்லும் பஸ்சில் கண்டக்டராக சென்றார்.

இணையம் சென்றுவிட்டு திங்கள்நகர் வழியாக அரசு பஸ் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தது. திக்கணங்கோட்டிற்கு பஸ் வந்தபோது அங்கு வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் தோட்டியோடு செல்ல கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார். அதற்காக ரூ.16 டிக்கெட்டை கொடுத்தார்.

அந்த வாலிபர் தன்னிடம் ரூ.5 மட்டும் இருப்பதாக கூறி கொடுத்தார். மீதி ரூபாயை தருமாறு கண்டக்டர் கேட்டார். அதற்கு அந்த வாலிபர் என்னிடமா பணம் கேட்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே அந்த வாலிபர் கண்டக்டரை ஆபாசமாக பேசியும், கத்தியை காட்டி மிரட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்தார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் கண்டக்டர் கண்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கண்டக்டர் கண்ணனை மிரட்டியது அழகியபாண்டியபுரம் மேலதெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த பொன்னு (37) என்பதும், வெல்டிங் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பொன்னுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.