பாலையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், அருப்புக் கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பாலையம்பட்டி, கல்குறிச்சி ஆகிய இடங்களில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இனங்களில் துணி உற்பத்திக்கு அதிக வரியை விதித்துள்ளது. அதன்படி ஜவுளி ரகங்கள், பாவு ரகங்கள், நூல் சிட்டம் ஆகியவற்றுக்கு 5 சதவீதம், சாயப்பவுடருக்கு 15 சதவீதம் என வரி விதிக்கப்பட்டு உள்ளது.
துணி உற்பத்தி ஒவ்வொரு மூலப்பொருட்களுக்கு தனித்தனியாக வரி விதிக்கப்பட்டு உள்ளதால் விசைத்தறி கூடங்கள் பெரிதும் நஷ்டத்தை நோக்கி செல்லும் நிலை ஏற்படும் என விசைத்தறி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துணி உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்கக்கோரி அருப்புக்கோட்டை பகுதிகளில் செயல்படும் விசைத்தறி கூடங்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. இதன் காரணமாக 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். 4 நாட்களில் மட்டும் ரூ. 1 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் பட்டாசை ஆடம்பர பொருளாக கருதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் அதற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பட்டாசு தொழில் நலிவடையும் என கூறி வருகிற 30-ந் தேதி முதல் சிவகாசியில் உள்ள பெரிய, சிறிய அளவிலான 700-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
இதற்கு பட்டாசு விற்பனை யாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து 30-ந் தேதி முதல் தாங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து உள்ளனர்.