பெரம்பலூர்:
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆலோசனை குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 561 வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம்
பெற்றுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து உணவு வணிக நிறுவனங்களிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தினமும் 2 முறை கிருமிநாசினியை கொண்டு வளாகத்தினை சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் இடம் மற்றும் நுழைவு வாயிலில் கிருமிநாசினி வைக்க வேண்டும். மேலும் கடந்த 4 மாதங்களில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, மொத்தம் 27 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட நியமன அலுவலகத்திற்கு 04328-224033 என்ற தொலைபேசி எண்ணிலும், 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும் தெரிவிக்கலாம், என்றார். கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன் (பெரம்பலூர் நகராட்சி), ரத்தினம் (வேப்பந்தட்டை), இளங்கோவன் (வேப்பூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.