திருவள்ளூர்:
திருவள்ளூரில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நலன்கருதி கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில், அதிகாரிகள் சிலர், தரகர்கள் மூலம் சிமெண்ட்டை தனியாருக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே சிமெண்ட் தரவேண்டும் என்ற விதிமுறை மீறப்படுவதாகவும், சில பயனாளிகள் வீடு கட்டாமலேயே சிமெண்ட்டை வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு தனியாரிடம் விற்பதாகவும் பொதுமக்கள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திராசேகர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அம்மா சிமெண்ட் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.