செய்திகள்

சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவால் மேற்கு வங்கத்தில் மதக்கலவரம்: துணை ராணுவம் குவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவைத் தொடர்ந்து, மதக்கலவரம் ஏற்பட்டது. நிலையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வைரலாகப் பரவியதையடுத்து, பாதுரியா பகுதியில் நேற்று இரவு மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

இதேபோல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. கலவரக் காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கினர். நிலையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. எனவே, துணை ராணுவத்தை அரசு அனுப்பி உள்ளது.

மொத்தம் 4 கம்பெனி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் (400 வீரர்கள்) வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பாசிர்கத், ஸ்வருப்நகர், பதுரியா, தேவ்கங்கா பகுதிகளில் மாநில போலீசாருக்கு உதவியாக இந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கவர்னர் கேசரி நாத் திரிபாதி தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ‘யாரோ ஒருவர் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் மாநில அரசின் தவறு எங்கே இருக்கிறது?’ என்றும் மம்தா கேள்வி எழுப்பினார்.