விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை ரசிப்பது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிங்கம், கரடி, புலி போன்ற ஆபத்தான வனவிலங்குகளை அருகில் சென்று ரசிப்பது சாத்தியம் அல்ல. இன்றும் கூட கிராமப் பகுதிகளில் குழந்தைகள் கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டிகளுடன் விளையாடுவதைப் பார்க்க முடியும்.
ஆடு, மாடு, நாய், பூனை போன்றவை தம்மை வளர்க்கும் குடும்பத்தினரிடம் கொண்டுள்ள அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கையின் காரணமாகவே கட்டுப்பட்டு நடக்கின்றன. அதேபோல் சுற்றுலாத்தளங்களிலும், உயிரியல் பூங்காக்களிலும் குரங்குகள், மான்கள் போன்ற விலங்குகளுக்கு சுற்றுலாப்பயணிகள் சிற்றுண்டி வழங்குவதை நாம் கண்டிருப்போம்.
இந்நிலையில், அமெரிக்காவில் மான்களை வீட்டிற்குள் அழைத்து பிரெட், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறிய பெண்ணின் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டில் சுற்றித்திரிந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து பிரெட், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை சாப்பிட கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து அந்த பெண் மீது கொலார்டோ வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவருக்கு 100 டாலர்கள் அபராதமும் விதித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் தற்செயலாக அந்த விலங்குகளை கொல்வதோடு, உங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வழியில் செல்கிறீர்கள். நீங்கள் செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்பட்டால், மக்களுடன் வாழ்ந்து, வளர்ந்து பழகிய நாய், பூனை போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். மான்கள் வந்து உங்கள் வீட்டு முற்றத்தில் வருவதற்கு பழக்கப்படுத்துகிறீர்கள் என்றால், மலை சிங்கங்களையும் உங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும்படி விரும்புகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’, என தெரிவித்தனர்.