சீர்காழி:
மயிலாடுதுறை செட்டித் தெருவை சேர்ந்தவர் நரேந்திசிங். இவரது மகன் பாலாசிங் (வயது 21). இவர் ஆடுதுறையில் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பர்களுடன் பூம்புகார் சென்று கடலில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்ட அவரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதனை கண்ட அவரது நண்பர்கள் பாலாசிங்கை காப்பாற்றும் படி சத்தம் போட்டனர். இது பற்றி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு படகில் சென்று பலியான பாலாசிங் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பூம்புகார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவத்தால் பூம்புகாரில் பரபரப்பு ஏற்பட்டது.
பூம்புகார் கடலில் அடிக்கடி இதுபோல் பலர் மூழ்கி பலியாகும் சம்பவம் நடந்து வருவதால் அங்கு ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை கைப்பதுடன், ஒரு போலீஸ்காரரை பணியில் அமர்த்தி கடலில் குளிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.