கோப்புப்படம் 
செய்திகள்

மீன் வளர்போர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் ஆனந்த் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன்வளர்போர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகரித்திடவும், மீன் வளர்போரை ஊக்கப்படுத்திடவும், மாவட்ட மீன் வளர்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் அமைத்த மீன் குளத்திற்கு உள்ளட்டு மானியமாக மீன்குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு மாவட்ட மீன் வளர்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருந்து, மீன் பண்ணையினை முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், 2012-13-ம் ஆண்டில் இருந்து 2015-16-ம் ஆண்டு முடிய உள்ள கால கட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைத்து அரசு நிவாரணம் ஏதும் பெறாதவர்களும் கடந்த 5 ஆண்டுகளில் மீன் குளம் அமைத்து மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிவாரணம் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே தகுதியான பயனாளிகள் நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.