பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறையின் சார்பில் ஏழை-எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கமும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் பள்ளி கல்வி முடித்த 150 பயனாளிகளுக்கு தாலி செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரி படிப்பு முடித்த 150 பயனாளிகளுக்கு தாலி செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 2,400 கிராம் தங்கமும், ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டன.
எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா இந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.