செய்திகள்

சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை

சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியுள்ளார்.

மாலை மலர்

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த வாழப்பாடியில் உள்ள நிஹாரிகா மருத்துவமனை டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவருடைய மருத்துவமனையும் மூடி சீல் வைத்திட மருத்துவத்துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.

சேலம் மாவட்டத்தில் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்துள்ளது. பெண் சிசு - பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்கள் அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்லுமாறும், அங்கு பாதுகாப்பாக இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படும். அவர்களது ரகசியம் காக்கப்படும். கண்டிப்பாக ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் நிலையத்தில் கண்டறிந்தால் அவர்கள் சட்டப்படி மிக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews