செய்திகள்

மண்டபம் அருகே சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்டு: கலெக்டர் நடவடிக்கை

மண்டபம் அருகே முட்டையினை மாணவர்களுக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் நடராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியனுக்குட்பட்ட பட்டணம்காத்தான் பள்ளியில் சத்துணவு மையம் உள்ளது. இங்கு கலெக்டர் நடராஜன் ஆய்வு செய்தார்.

இந்த சத்துணவு மையத்தில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 102 ஆகும். ஆய்வின் போது 80 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை அவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு உணவான முட்டையினை மாணவர்களுக்கு வருகைப் பதிவேட்டின்படி முறையாக வழங்காதது கண்டறியப்பட்டது.

மேலும் கலெக்டர் ஆய்வு செய்த போது சத்துணவு அமைப்பாளர் ஜெயகோபி என்பவர் பணியில் இல்லை. பணியில் இல்லாததற்கான விடுப்பு கடிதமோ அல்லது அனுமதி கடிதமோ மையத்தில் வைக்கப்படவில்லை. செப்டம்பர் மாத வருகைப் பதிவேடும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் ஜெயகோபி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT