சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி அருகே உள்ள கொத்தயம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நல்லதங்காள் அணை நிரம்பி நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பணியாளர்கள் மூலம் உடைப்பை சரி செய்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, நல்லதங்காள் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியையும், அவை சரிசெய்யப்பட்டதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், மீண்டும் உடைப்பு ஏற்படாத வகையில் பல மீட்டர் தூரம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் பழனி ஆர்.டி.ஓ. அசோகன், ஒட்டன்சத்திரம் தாசில்தார் சுப்பையா, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன், பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.