கும்பகோணம்:
கதிராமங்கலம் ஊராட்சி ஒட்டைக்காரத் தெருவில் புதியதாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ள இடத்தினை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி தற்காலிகமாக சின்னக்கடை தெருவில் செயல்பட ஏதுவாக தற்காலிக வகுப்பறைகளை பார்வையிட்டு பிரதான சாலையிலிருந்து பள்ளி வரை தெரு விளக்கு அமைக்கவும், சாலை வசதி ஏற்படுத்தவும், கட்டிடத்தில் பழுதடைந்த இடங்களை விரைந்து சீரமைக்கவும், தற்காலிக கழிவறை அமைக்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலக பின்புறம் உள்ள கட்டிடத்தில் தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகைப் பதிவேட்டினை பார்வையிட்டு மருந்து கையிருப்பினை கேட்டறிந்தார். அருகே உள்ள குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கவும், தெருவிளக்குகளை புதுப்பிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வீரமணி, உதவி பொறியாளர் ஜவஹர் ஆகியோர் உடன் இருந்தனர்.