செய்திகள்

நாகை மாவட்டத்தில் 19-ந்தேதி தமிழ்நாடு பொன்விழா தடகளப் போட்டிகள்: கலெக்டர் தகவல்

நாகை மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு பொன்விழா தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கீழ்வேளூர்:

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்வரும் 19.7.18 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தடகள விளையாட்டில் 100மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.17 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.2,500ம், 2ம் பரிசு ரூ.1,500ம், 3ம் பரிசு ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000-ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசு ரூ.25,000ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசு ரூ.10,000ம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.